சிறப்புச் செய்தி தாயகச் செய்தி 

யாழ் வட்டுக் கோட்டை பிரதேச வைத்திய சாலைக்கு முன்பாக, பொது மக்கள் கவன ஈர்ப்பு போராட்டம்,

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டை பிரதேச வைத்தியசாலைக்கு முன்பாக, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பொதுமக்கள் இன்றையதினம் அமைதியான கவன ஈர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டம், குறித்த வைத்தியசாலையின் நோயாளர் நலன்புரி சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்றதுடன், பொதுமக்கள், நோயாளிகள், சமூக அமைப்பினர் உள்ளிட்ட பலரும் இதில் கலந்து கொண்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள், வைத்தியசாலையில் போதுமான கட்டட வசதிகள் இருந்தபோதிலும், தற்போது இரு வைத்தியர்கள் மட்டுமே பணியில் உள்ளனர் என்றும், ஒரு தாதியர் கூட நிரந்தரமாக நியமிக்கப்படவில்லை என்றும் குற்றம்சாட்டினர்.

மேலும், முன்பு 24 மணி நேர சேவை வழங்கப்பட்ட இந்த வைத்தியசாலை, தற்போது அந்த சேவையை இழந்துள்ளதாகவும், நோயாளர் விடுதி இயங்காமல் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

அதேபோல், வைத்தியசாலைக்கு சொந்தமான நோயாளர் காவு வண்டி (அம்புலன்ஸ்) காரைநகர் வைத்தியசாலைக்கு தற்காலிகமாக மாற்றப்பட்டுள்ளதாகவும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.

இதனால், வட்டுக்கோட்டை மற்றும் சுற்றுப்புற மக்களுக்கு அவசர சுகாதார சேவைகள் பெறுவதில் பெரும் சிரமம் ஏற்படுகின்றது என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் , ”வைத்தியசாலையை தரமுயர்த்துங்கள், விடுதி இயங்கும் வைத்தியசாலையாக இந்த வைத்தியசாலை தொழிற்பட வேண்டும், மக்களின் ஆரோக்கியம் எங்கள் உரிமை, சுகாதார சேவைகள் அரசின் கடமை, நோயாளிகளின் உயிர் முக்கியம், வட்டுக்கோட்டை வைத்தியசாலையை புறக்கணிக்க கூடாது, மருத்துவ சேவையில் குறைபாடு வேண்டாம், வைத்தியசாலையில் இடைநிறுத்தப்பட்ட கட்டட வேலைகளுக்கு நிதியை வழங்கு” உள்ளிட்ட வாசகங்கள் எழுதப்பட்ட பதாகைகளை ஏந்தி போராட்டத்தில் ஈடுபட்டனர்.

அன்மைச் செய்தி

Leave a Comment